தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் கட்சிப் பதவியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் ஆட்சிப்பொறுப்பை அவர் ஏற்க முடியாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேசமயம், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. எதிரணியில் உள்ள ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட்டு பணிகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுவார். தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும் அதிகாரத்தையும் அவர் பெறுவார்.